பண்ருட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நெய்வேலி இந்திரா நகர், வடலூர், கடலூர் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிவசுப்ரமணியன், சொரத்தூர் ராஜேந்திரன், சம்பத் ஆகியோரையும், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவையும் ஆதரித்து பேசியதாவது: தி.மு.க., ஆதரவு "டிவி'க்களில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த விஜயகாந்த் பணத்துக்கு விலை போகிறவன் அல்ல.
நீங்கள் (தொண்டர்கள்) கூட்டணி வேண்டும் என, சேலத்தில் சொன்னீர்கள். அதன்படி, என் மானசீக குரு எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளேன். தி.மு.க., கூட்டணி எண்ணெய் - தண்ணீரை போன்றது. ஒட்டாது. நம் கூட்டணி தேனும், பாலும் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவேன். தி.மு.க., ஆட்சிக்கு ஜீரோ மார்க் என, குரல் கொடுத்த ராமதாஸ் இப்போது அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? டில்லியில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் ஊழலை ஒழிக்கவும், லோக்பால் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார். இது காங்., கட்சிக்கு சேர்த்துதான். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அன்னா பெயரை கொண்டவர் டில்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார். இங்கு அண்ணா துரை பெயரைச் செல்லி கொள்ளை அடிக்கிறார்கள். சோனியா, இங்கு தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும் என பிரசாரம் செய்கிறார். இவர்கள் செய்தது சாதனைகளா? சோதனையும், வேதனையும் தான் உள்ளது. தி.மு.க., தோல்வி என மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு திருத்தி எழுத முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:
Post a Comment